எனது மின்னூல்கள்

Tuesday, 17 May 2011

நூல் பல கற்க

தம்பிகளே ! தங்கைகளே !



தகவல் ஒன்று கேளுங்களேன்



நாளும் பள்ளி சென்றிடுவீர்



நன்கு பாடம் கற்றிடுவீர்



நினைவில் நிறுத்தப் பழகிடுவீர்


தேர்வில் தேர்ச்சிப் பெற்றிடுவீர்

அவை மட்டும் போதா கண்மணிகாள்

அறிவை நாளும் வளர்த்திடனுமே

அதற்கு வழியென்ன கேட்பீராயின் 

அறிஞர் சொல்வர் “ நூல் பல கற்க ”

கதைகள் கவிதைகள் கட்டுரைகளாம்

கணிதம் அறிவியல் அரசியலாம்

பொருளியல் புவியியல் பொதுஅறிவாம்

சரித்திரம் சமயம் தத்துவமாம்

எத்துணை எத்துணை நூல் வகையாம்

எல்லாம் நீங்கள் சுவைத்திடலாம்

நூல்கள் பலவும் படித்திடுவீர்

நுண்ணிய அறிவைப் பெற்றிடுவீர்

விலைக்கு வாங்கியும் படித்திடலாம்

நூலகம் சென்றும் படித்திடலாம்

நூல்கள் கற்று முடித்திடுவீர் 

நூல்கள் இயற்றக் கற்றிடுவீர்

படித்தது போலவே நடந்திடுவீர்

பாரினில் நம்புகழ் பரப்பிடுவீர்

                                                                    ( உலக புத்தக தினம் - ஏப்ரல் 23 )         
.... என் சொல்லித் துதிப்பேனோ ....

சக்தியே பராசக்தியே ஆதி பராசக்தியே !
மா சக்தியே மண்ணுயிர்க் கெல்லாம் மாதாவே
தீப்பிழம்பின் ஒளியும் நீயே
ஊழிக்காற்றின் நர்த்தனமும் நீயே
ஆழிவெள்ள ஆர்ப்பரிப்பும் நீயே
முடிவற்ற வெளியும் நீயே
முடிவுறும் மண்ணும் நீயே
அண்டபகிரண்டங்களையும் படைத்தாளுவது நீயே
அறிவதும் நீயே அறியப்படுவதும் நீயே
நானுணரும் பொருளனைத்தும் நீ படைத்தவையே
நின் படைப்பையே உவமையாக்கி போற்றல் தகுமோ
மா சக்தியே உனை என் சொல்லி வாழ்த்துவேனோ
சொல்லெனக்கு நீயே !
சொல்லும் நீயே , பொருளும் நீயே
சொல்லின் ஒலியும் μசையும் இசையும் நீயே
இயற்கை நீயே , இயற்றலும் நீயே
இயல்பாய் காப்பாய் உயிரனைத்தையும் நீயே
அன்னை பராசக்தி போற்றி போற்றி !!
மறுபடியும் மணந்தேன் என் மனையாளை .....

அகவை அறுபது யானடையுங் காலை
இகமுள இன்பமும் துன்பமுமான அனுபவப் பதிவுகளை
மகன்களுக்கும் மருகியர்க்கும் மனம்திறந்தே பகிர்ந்தோமே
தகவுரையும் தந்தோமே தரணியிலவர் சிறக்கவே

மாமிக்கும் மாமனுக்கும் மறுபடியும் கல்யாணமாம்
மணவிழா மாண்புற முனைவதுவோ மணாட்டுப்பெண்களாம்
தாய்க்கும் தந்தைக்கும் மணிவிழா காண்பதுவாம்
சேய்களுடன் புத்திரர்கள் சூழநின்று உவப்பதுவாம்

மருமக்கள் குதூகலிக்கும் அறுபதாம் கல்யாணமாம்
மகன்கள் பார்த்துவக்கும் பெற்றோரின் கல்யாணமாம்
பேத்தியும் பேரனும் பேசப்போகும் கல்யாணமாம்
சம்பந்தியர் கொடையுடன் சம்பிரதாயக் கல்யாணமாம்

கடைக்கண் பார்வையில் பதினாறும் தருபவளாம்
கடையூரில் சென்றவள் பொற்பாதம் பணிந்திடலாம்
காலசம்கார மூர்த்தியை முன்னிலை வைத்திடலாம்
கல்யாணம்தான் கட்டலாமெனக் கட்டியந்தான் கூறினரே

ஆவணித் திங்கள் இருபத்தோராம் நாளதுவாம்
அவனியில் நான்பிறந்து ஆண்டறுபது முடிவுறுமாம்
சிவனிடம் மார்கண்டன் சீர்பெற்ற தலமதுவாம்
இவரிருவர் மறுபடியும் மணம்புரிய ஏற்றதுவாம்

தலைமைதனை ஏற்றதுவோ ஆரணங்கு அனிதாவாம்
இலையொரு குறையே என்பதொன்றே குறையதுவாம்
இளையோரும் இளைத்தாரில்லை இச்சகமோ இதுவல்லவாம்
களைகட்டல் கண்டீர் கண்மணிகாள் கல்யாணவைபோகமாம்

உல்லாச ஊர்தியிலே உவப்புடனே புறப்பட்டோம்
இல்லாளும் நானும் எண்மரோடு மழலையர்
இனியவரிருவரும் கடையூர்தான் சென்றடைந்தோம்
இனித்தமுடன் வைபவத்தை எளிமையாய் நடத்திடவே

மந்திரசாத்திர சம்பிரதாயச் சடங்குகள் நிறைந்திட
சுந்தரத் தமிழினில் அர்ச்சகர் பொருளுரைத்திட
அந்தணர் இருவரும் மணவினைகள் நிகழ்த்திட
வந்தவர்க்கு விளங்கிட விழைந்துகூடி வாழ்த்தினரே

காலனைக் காலிலிருத்திக் கறைகண்டன் அருள்சுரக்க
வேலவன் பெயர்கொண்டோன் மணவறை வீற்றிருக்க
வலனமர்ந்தவள் நாணுடன் மங்கல நாணேற்க
இலங்கினாளென்னவள் அட்சதை என்னுடன் அவள்பெறவே

எந்தன் பிள்ளைகள் மருமக்கள் பேத்திபேரனுடன்
வந்தெம் முன்வீழ்ந்து வணங்கி எழுந்தனரே
தந்தோம் மனம்முதிர்ந்த ஆசிகள் தக்காரவரெனவே
பந்தம் பாகாய்க் கசிந்துருக நன்றியுரைப்போம் நாங்களிவர்க்கே

எந்தன் மனையறம் என்றும் வளர்ந்திடவே
தந்ததென் மனையாள் மனோகர மனோரதமே
பந்தமெனப் பயக்கவே பப்பாதியானவள் மீதே
பந்தனந்தாதிஅன்ன பாடிடத்தான் துணிவேன் யானும்


இத்துணை நாளும் நான்பெற்ற இத்துணையை
எத்துணை நாளாகிலும் காத்திடுவேன் இணையாய்
அத்துணை நாளும் வாழ்ந்திடுவோம்உறுதுணையாய்
அரிதுணை நாடியே அடைந்திடுவோம் அடியிணையை

மறுபடியும் மணந்தேனென் உடனுறை மனையாளை
மறுபடிமறுபடி பிறப்பினும் இணைபிரியோமே இவ்வுலகில்
உறுதுணையில் பதிசதியாய் சதிபதியாய் மாறிடுவோமே
இறுதிவரை இவ்விதமே இணக்கமுடன் இணரோங்கிடுவோமே

வாழ்க எம்மக்கள் தத்தம் மனைவிமக்களுடனேயே
வாழ்க எம்சுற்றமும் நட்பும் நலம்பல நிறைந்திடவே
வாழ்க எம் மனிதவினம் பல்லுயிரோடிணங்கியே
வாழ்க வாழ்கவே இப்பூவுலகம் முழுமையுமே
 
.... இருவருமாய் இறைஞ்சிடுவோமே ....


இருமுதுகுரவர் இணையடி போற்றி

இருமரபுணர்ந்து இயல்பாய் வளர்த்து

இருபொருளதனை இருவரும் இயற்றி

இருமருந்ததனை இருந்திட ஏற்று

இருசுடரதனை இயங்கிடத் துதித்து

இருடிகளவரை இதயத்தில் பதித்து

இருவகையறமும் இம்மையில் துய்த்து

இருமையிலும் இருவராய் இருந்திட

இருபோதும் இறைவனை இறைஞ்சிடுவோம்


அறிக
 

இருமுதுகுரவர் --------- தாயும், தந்தையும்
இருமரபு ---------- தாய்வழி, தந்தைவழி வந்த மரபுகள்
இருபொருள் ---------- கல்வியும், செல்வமும்
இருமருந்து ---------- உணவும், நீரும்
இருசுடர் ---------- சூரியனும், சந்திரனும்
இருடிகள் ----------- பதினொரு முனிவர்கள்
(வசிட்டர் தொடங்கி துருவாசர் ஈறாக)
இருவகையறம் ------- இல்லறமும், துறவறமும்
இருமை ---------- இம்மையும், மறுமையும்
இருபோது ----------- காலையும், மாலையும்
 

Sunday, 1 May 2011


.... களப்பலி ....

ஆண்டுகள் ஐந்து ஆனால் போதும்   

ஆண்டிட அனைவரும் அண்டி வருவர்
குடியரசு சமைத்திட வேண்டுமென்பர்
குடியர் அரசாய் குலைத்திடுவர்
மக்களாட்சி மலர்ந்தது என்பரவர்தம்
மக்கள் ஆட்சி மகுடமேற்பர்

வாக்குக்கேட்டு வணங்கி வருவர்
வகைவகையாய் வாக்குறுதி அளிப்பர்
மாவரைக்கும் எந்திரமுண்டு
மடிக்கணினி தானுமுண்டு
தலைக்கொரு தொகையுமுண்டு
தவறாது வாக்கு வேண்டும்

அவரவர் அட்டைக்கு அரிசி உண்டு
அஞ்சறைப் பெட்டிக்கு மளிகை உண்டு
இளைப்பார மின் விசிறி உண்டு
இனிய பொழுதிற்கு வண்ணத்தொலைக்காட்சி
இவையனைத்தும் இலவசமே
இன்னுமுண்டு வாக்களித்தால்

ஐய உந்தன் வாக்குதான் அதிவிலைக்கு விற்பீரோ
பைய பைய வாங்கிடுவீர் மீதமுள்ள தேவைக்கு
வைய வைய தந்திடுவோம் தானமாக இன்னுமே
ஈய ஈய ஏற்பீரோ இளிச்சவாயர் ஆவீரோ

அப்பாவி கையில் வாக்கு
தப்பாது விலையாகும் போக்கு
எப்போது புரியும் இவர்க்கு
அப்போது அவர்க்கு சுருக்கு

குடி வாழக் கோன் வாழ்ந்தான் அன்று
குடி கொடுத்து குடி கெடுப்பார் இன்று
சொல்வதெல்லாம் இவர் செய்வதுண்டு
செய்வதெல்லாம் நமக்குச் சொல்வதுண்டோ

வறியவர் வாழ்ந்திட வேண்டுமெனில்
வளம் தரும் வேலை தந்திடனும்
பொருளது ஈட்டிட வேணுமாயின்
பொருள் தரும் பிச்சை தவிர்த்திடனும்

நன்மை செய்வோர் திறனறிந்து
தேர்தல் செய்து தருவீரே
நாட்டை ஆளச் செய்வீரே
சேட்டை செய்யத் தொடங்கினால்
கோட்டையில் இருந்து குடிசைக்கு
பாட்டை போட்டுக் கொடுப்பீரே
 
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் களத்தில் பலியாவது வாக்காளரே 

Tuesday, 26 April 2011


....ஏன் சென்றாய் ?  ....


பூமி சிறக்கப் பூத்துவந்தாய்
சாமியெனவே கருத்தில் கொண்டார்
சாதித்துக் காட்டினாய் சமுதாயத்தொண்டு
சாதியைக் கடந்து  சமயம் வென்று


கை அசைய சித்து பிறந்தது
கண்அசைய கங்கை வந்தாள்
தலை அசைய தன்வந்திரி வந்தான்
விரல் அசைய விளையாட அரங்கமானது

பல் அசைய பல்கலையே உதித்தது
நா அசைய ஏழிசை செழித்தது
மெய்  அசைய ஏழமை சென்றது
பார் அசைய ஏனின்று சென்றாய் ?


                                         மானுட சேவையால் மகத்துவம் அடைந்த
                                          சாய் பாபா மறைவிற்கான இரங்கற் பா

Monday, 25 April 2011

 .... பூத்ததுவே புதியதொரு தலைமுறை   ....   


வித்ய விவேகர் விரும்பிய வரமாய்
விளைந்தனள் எம்குலம் புகழொடு பெருக
வந்தனள் வடிவுறு நல்லாள் அவளே
வர்ஷா எனப் பெயர் கொளவே



இகமது  இரப்பது  இனியதம்  மழையே
இல்லறம்  சிறப்பது  நன்மக்கள்  வரவே
வர்ஷா  நீயும் வர்ஷிப்பாய்  ஈங்கு
வளம்பல  வரவும் திறம்பல பெறவும்



பாரினில் சிறந்திருந்த பாரதத்தின் பாதமாய்
பண்டுதொட்டு புகழுடைத்து தமிழ்கூறும் மாநிலமே
மாதவமே செய்திடனும் மங்கையராயிங்குப் பிறந்திடவே
மன்னுபுகழ் பெற்றாய் இக்குலத்தில் நீயும் உதித்தே



அன்பும் அறமும் அகத்தே பெற்றனர்
கல்வியும் கலையும் கண்களாய் உடையனர்
தானமும் தர்மமும் தானுடையர் ஆயினர்
காதலும் கடமையும் கலந்தே பயின்றனர்



வீரமும் விவேகமும் விளைத்து மகிழ்ந்தனர்
பாட்டும் பண்ணும் பழகிக் களித்தனர்
இசையும் கூத்தும் இழைத்து வந்தனர்
வேள்வியும் வித்தையும் வேண்டிப் பெற்றனர்



மோனமும் ஞானமும் முதலில் முயன்றனர்
பக்தியும் முக்தியும் பாருக்கே பகன்றனர்
வேதமும் வேதாந்தமும் வெளியுலகுக் களித்தனர்
சித்தும் சித்தாந்தமும் சிறக்கக் காட்டினர்
மந்திரமும் தந்திரமும் மானுடர்க்குப் புகட்டினர்



தவமும் தத்துவமும் தரணிக்களித்தனர்
பசுவுக்கும் பறவைக்கும் நேர்செய்யலாயினர்
பயிருக்கும் கொடிக்கும் பரிவுடையராயினர்
பகுத்தறிவும் பழமையும் பாருக்கு உரைத்தனர்
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மெய்ப்படுத்தினர்



காண விழைந்தனள் இவையாவும் காவிரித்தாய்
கண்டதும் கவிதையாய்ப் பொங்கிப் பெருகினள்
வண்டலும் வளமையும் வாரியே வழங்கினள்
தண்டமிழ் நாட்டில் செழுமையே நிறைத்தனள்



பாட்டன் பகன்றவையாவும் பழம் பெருமையம்மா
பாரிலின்று பரிதவித்து நிற்பதுநம் சிறுமையம்மா
கனவாய்ப் போனதுவே காவிரியின் பெருவெள்ளம்
கரிகாலன் கரையதுவும் காலடிப் பாதையானதுவே
அகண்ட காவிரியும் ஆடுதாண்டிக் காவிரியானதே



புதுவரவே             புத்துயிரைப்          புகட்டிடுவாய்
புதுப்பொலிவே   புகழனைத்தும்     ஈட்டிடுவாய்
புதியதலைமுறையே புதுமையெனப் புறப்படுவாய்
பழம்பெருமை     பக்குவமாய்           மீட்டிடுவாய்
பூவுலகில்             நம் புகழை             நாட்டிடுவாய்



பொய்யாது    நீயும்          பொழிவாய்    அன்பை
செய்யாது     நீயும்          மறவாய்       தின்மை
சொல்லாது   நீயும்          செய்வாய்     நன்மை
கல்லாது      நீயும்          தவிர்ப்பாய்   பொய்மை
நில்லாது      நீயும்          விலகுவாய்   கயமை
வையாது      நீயும்          வாழ்த்தாய்    உயிரை
மறவாது       நீயும்          ஈவாய்         கருணை
தவறாது       நீயும்          கொள்வாய்   மேன்மை
வாழ்வாங்கு   நீயும்          வாழ்வாய்      இம்மை
சூழாது        நின்னை      சூதும்        வாதும்



வற்றாது வர்ஷிப்பாய் வருணனது தங்கையாய்
வழுவாது வடிவேலன் வாக்கெதுவும் சத்தியமாய்




                                                                                       பேத்தியை வாழ்த்திப் பாடியது

Wednesday, 20 April 2011


... பொறையின் உருவே !  பூமித்தாயே !! ...

கோடி கோடி ஆண்டுகள்
ஓடி ஓடி உருண்டன
நாடி நாடி நாங்களும்
தேடித் தேடி வந்தோமே


ஓரிருவராய் இருந்தோம் அன்று
ஆறுநூறுகோடியை மிகுந்தோம் இன்று
இருந்தும் எங்களைச் சுமக்கின்றாய்
இன்றும்  தொடர்ந்து சுழல்கின்றாய்


தாங்கி நிற்கிறாய் எங்களை
ஏங்கிப் பார்க்கிறாய் உன்னையே
தங்கிப் போகும் நாங்களோ
இங்கி ருக்கவே முயலுகிறோம்


தோண்டித் தோண்டிப் பார்த்தோமே
மீண்டும் மீண்டும் சுரந்தாயே
குடைந்து உன்னுள் சென்றோமே
குபேர செல்வங்கள் கொடுத்தாயே


கீறிய மேனியில் விளைத்தோமே
சீரிய பலனைக் கொடுத்தாயே
பூவாய்க் காயாய்க் கனியாய்ப்
பூண்டாய் தருவொடு நிழலாய்


காடு மலை நீக்கியே
வீடு வாசல் கட்டியே
ஓடு மாற்றைத் தடுக்கியே
கேடு செய்தோமுன் மேனியை


வீசு காற்றை நாளுமே
மாசு படுத்தி நலிந்தோமே
தூசு துப்பு குவித்தோமே
ஆசு ஆக்கி அழித்தோமே


ஆயுள் முழுதும் சுமக்கிறாய்
ஆயினும் நாங்கள் மறக்கிறோம்
ஆவன செய்யத் தவிர்க்கிறோம்
ஆதலின் நீயும் வெறுக்கிறாய்


அருமை அறிந்தோம் இல்லையே
பொறுமை நீயும் இழந்தனையே
ஊழிக் காலமது வருமுன்னே
ஆழிப் பேரலையைக் காட்டுகிறாய்


பூமித்தாயே! பொறையின் உருவே!!
சாமியும்  நீயே, சத்தியம் நீயே
காமி நீயே கடைக்கண் அருளே
யாமிங்கு  திருந்தி வாழ்ந்திடவே


சுற்றுச்சூழல் இனிக் காத்திடுவோம்
சுற்றிப் பசுமையை நிறைத்திடுவோம்
விண் முட்ட மரம் வளர்ப்போம்
மண் தழைக்க மழை பெறுவோம்


வெப்பம் குறைத்து நீ குளிர்ந்திடுவாய் 
தட்பம் நிறைத்து நீ மிளிர்ந்திடுவாய்
இளமையொடு நின்வளமை நிலைத்திடவே
இனியே மானுடம்தான் உழைத்திடுமே



பூமி வாழ  நாம் வாழுவோமே பூமிதினம் கொண்டாடுவோமே



 
        
To view my previous poems in Tamil, go to Archives ( right side of this page )

Wednesday, 23 March 2011

... நலிவடையுதே நான்கு கால் மண்டபம் ...

மண்டபமாம்  மண்டபம் -  இது
மக்களாட்சி மண்டபம்
நான்கு கால் மண்டபம் -  இது
நாமிருக்கும் மண்டபம்
பாரினிலே பெரியதாம் -  இந்த
பாரதத்து மண்டபம்


பலத்தில் பெரிய தூணதுவாம் - அதற்குப்
பாராளுமன்றம் எனப் பெயராம்
அதிகாரமிக்கத்  தூணதுவாம் - அதற்கு
அரசு என்ற  பேரதுவாம்
நெளிவு சுளிவில்லா தூணதுவாம் - அதற்கு
நீதித்துறை என்னும்பெயராம்
ஊக்கம் உடைய தூணதுவாம் - அதற்கு
ஊடகம் என்றே  பேரதுவாம்


ஒன்றிற்கொன்று உறுதுணையாய் - நாட்டை
நின்று காத்திட வேண்டுமே
விரிசல் கொண்ட தூண்களால் - இன்று
விழுந்திடுமோ நம் மண்டபம்
குடுமிப்பிடி சண்டையில் - விரைந்து
குலைந்திடுமோ  மண்டபம்
நாலு தூண்களும் பேசினவே - புழுதியை
மாறி மாறி இறைத்தனவே
மன்றத்தூண்தான்  சாடியதே - அந்த
அரசுத்தூணை அசைத்திடவே
     
“தலைநகரில் விளையாட்டு - பெரும்
தலைக் குனிவாய்ப்  போனதுவே
ஆயிரமாயிரம் கோடிகளும் - எங்கோ
அவசரமாய் மறைந்தனவே
பித்தளைக்கும் தங்கவிலை - ஒரு
பித்தர்கூடத்  தருவாரோ

தொலைத் தொடர்புத் திட்டமாம் - அதில்
 தொலைந்ததுவே மக்கள் பணம்
 இலட்சம் கோடி என்றெல்லாம் - நாமும்
 இலக்கம் மறக்கும் தொகையதுவாம்


 அலைக்கற்றை விற்பனையாம் - ஆனால்
 இலைக்கட்டு விலையிலேயாம்
 கூடிக்கூடி குவித்தீரே - எங்கள்
 கோடிக்கோடி வரிப்பணத்தை ”


கேட்டு நின்ற அரசுத்தூண் -  மிகக்
கேலியாய் நகைத்ததுவே
திட்டித்தீர்த்த மன்றத்தூணைத் - தானும்
திருப்பிக் கேட்கத் துணிந்ததுவே


“ பாராளு மன்றத்தூணே - நீயும்
 பாருனையே காலக்கண்ணாடியில்
 ஆட்சி யமைக்க ஒரு விலையும்
 அதையே கவிழ்க்க ஒரு விலையும்
 அமைதி காக்க ஒரு விலையும்
 அடுத்துக் கெடுக்க ஒரு விலையும்
 கேள்வி கேட்க ஒரு விலையும்
 கேளாதிருக்க ஒரு விலையும்
 கேட்டுக் கேட்டுப் பறித்தாயே
 கேட்பதற்கு இங்கு ஆளில்லையோ



 தினந்தோறும் கூச்சல் குழப்பம் - ஆனால்
‘தினப்படி’ மட்டும் மறப்பதில்லை
ஊழலுண்டு அரசியலில்  - எனின்
ஊழலிலும் அரசியல்தானே ”


உரக்கக்கூவியது அரசுத்தூண் -ஆங்கு
உற்றுக்கேட்டது ஊடகத்தூணும்
ஊக்கம் மிகுந்த ஊடகந்தான் - உடன்
உளவு வேலை பார்க்குதாம்
தாம் துலக்கிய  துப்பைக்கொண்டு
தரகு வேலையும் செய்யுதாம்


அமைச்சர் பதவி பெறுவதற்கும்
அமைச்சர் பதவி மறுப்பதற்கும்
அதிகாரத் தரகர் உண்டாமே
ஊடகர் தரகு பேசியதை
ஊரே கேட்டு நொந்ததுவே


இலஞ்சம் கொடுத்தே இலஞ்சத்தை
இரகசியமாய்ப் படம் பிடித்ததுவே
அம்பலமாயின அவலங்கள்
அவமானமுற்றது தேசமே
வெளிச்சம் போட்டுக் காட்டிடவே
இளித்ததுவே  அந்த ஊடகத்தூணும்


 “சின்னத்தனம் செய்வோரும் - எந்தன்
சினத்திரையில் சிக்கினரே
வரிவரியாய் எழுதுவேனே - அதை
ஒலி ஒளியாய்க் காட்டுவேனே
அணிவகுத்து நிற்பீரே- நொடியில்
அணிமாறியே ஓடிடுவீரே


கூடிக்கூடிப் பிரிவீரே - என்றும்
கூடா நட்பைக் கொள்வீரே
சாடிக்கேற்ற மூடியாய் - நாட்டில்
மோடிமந்திரம் செய்வீரே
ஊடுவதும் சாடுவதும் - அடுத்துக்
கூடுவதும் குழைவதும்
ஊரை ஏய்த்துத் திருடிடவே


வகை வகையாய்  வாக்குறுதியாம் - உடன்
உறை உறையாய்  காசுபணமாம்
கையூட்டுக் கொடுத்தேதான் - வாக்கைக்
களவாடிச் செல்வீரே


வீரர்களையும் விலை பேசுவர் - அவர்தம்
விளையாட்டில் சோரம் போவர்
நாடு காக்கப் போரில் மடிவர் - அவர்க்கென
வீடு கட்டித்  தானே குடிபுகுவர்


திருடனைக் கொண்டு காவல் போடுவார் - அவரும்
திருடிமுடித்தே திரைமறைவாவார்
கொள்ளையடிக்கக் கூட்டுசேர்ப்பார் -  அதில்
குட்டுடைய சாதியே  சரணமென்பார்


களவு போனதைத் துப்பறிய - அதற்கும்
கள்வரையே  பணித்திடுவார்
எதிரி நாட்டு வியாபாரி - இங்கு
ஏலம் பெற்றுச் சென்றிடுவார்
விரித்தது வலையென விளங்காதே - அதில்
வீழ்ந்தீரே விலாங்கு மீனெனவே
முப்புறமும் தீ எனினும் - மூத்தோர்
மோனித்திருந்தே சமர்த்தராவார் ”


மூன்று தூண்களும் முட்டினவே - முடிவில்
நான்காம் தூணை நாடினவே
ஈற்றில் நிற்கும் நீதித் தூணும் - மூவர்
சோற்றில் பூசணி மறைப்பது கண்டு
மெளனம் களைந்து பேசியதின்று


சண்டை  சச்சரவைக் கேட்டதுவே - வெகுண்டு
சாட்டைச் சொற்களை  வீசியதே
சாடிச் சாடிச் சலித்ததுவே - முடிவில்
தண்டனைத் தீர்ப்பைத் தந்திடுமே
        
தேசப்பற்று நீங்கியே - இன்று
தேசப்புற்று பரவுதே
கோடி நூறு மக்களுக்கு - இன்று
குடை  பிடிக்கும் மண்டபம்
வலுவிழந்து போகுமோ - நாமும்
வாடி நிற்க வேண்டுமோ
செல்லரித்த  தூண்களை - சரியாய்ச்
செப்பனிட வேண்டுமே


நல்லவரும் வல்லவரும் - நம்மில்
படித்தவரும் பண்புடையோரும்
செயலிழந்தே ஒதுங்கிடாது -சேர்ந்தே
களை எடுக்க முனைவோமே
கடன் முடித்து வெல்வோமே     




உச்ச நீதிமன்றம்

Monday, 21 March 2011



... ஏனிந்தச் சீற்றமோ இயற்கை அன்னைக்கு ...

கடல்மாதா தாலாட்டினாள்
பூமிமாதா சயனித்திருந்தாள்
பூமிமாதா சற்றே ஒருக்களித்தாள்
கடல்மாதா விளையாடினாளே
கரைதாண்டிய கபளீகரமாய்
சுனாமியென்றே பெயர்கொண்டு


தான் சுமந்த நாவாய்களை தரைக்குத் தள்ளியே
மண் சுமந்த மனைகளை மடியில் வாங்கினளே
விழுங்கிய மனிதத் தேனீக்களை செறிக்கவியலாதே
விரைந்தே கரைதிரும்பி உமிழ்ந்தனளே சவங்களாய்   


கப்பல்களை வீட்டுக்கூரையிலும்
கார்களை ஆழ்கடலிலும் இடம்பெயர்த்தினள்
தீவுகளும் பயந்து நகர்ந்தனவே
பூமியின் அச்சிலிருந்து விலகினவே


விழித்துப் பார்த்த பூமிமாதா
விரைந்து சுழன்றனள் தன்னைமறந்தே
பகலும் குறுக இரவும் குறுக
பயத்திலின்று மனிதகுலம் நடுங்க


இயற்கை அன்னைக்கு ஏனிந்த சீற்றமோ
செயற்கை அழிவை மானிடர் தேடுவதாலன்றோ
அணுவுலைகள் ஏற்றினீர் அதிசக்தி பெற்றிடவே
கசிந்தனவே உலைகளும் வீசினவே கதிர்களும்


செர்னோபில் உரைத்த பாடங்களைத்தான்
செகத்தினரும் செவியில் ஏற்றாரில்லையே
ஜப்பான் தருகின்ற பாடங்களையும்
தப்பாது தவிர்க்கவே முயலுகின்றாரே


வல்லரசு என்னும் திறம் போதும்
நல்லரசு என்னும் தரம் வேண்டாவென
பொல்லாக் கொள்கையைப் புவனம் பூண்டதே
எல்லா அழிவிற்கும் அச்சாரம் ஆகுதே
தாரணியில் தாமும் வல்லரசெனும்
ஓரணியில் சேரவே விழைகின்றனரே


ஊழிக்காலம் வருகுதென்பதையே
ஆழிப்பேரலையாள் உணர்த்துகிறாளோ
மீண்டும் மீண்டும் அறிவிக்கின்றாளோ
மாண்டு போகுமே மனிதகுலமென்றே


கோடிக்கரங்கள் கூடி உருவாக்கின
மூடித்திறக்கும் நொடியில் உருண்டன
பொடி நடுக்கம் பூமி செய்திடின்
மடிந்தே போகுதெம் மன்பதையே


நடுங்கியது நாணமறு நிலமடந்தை
பிடுங்கியதவர் உறவும் உடைமையும்
ஒடுங்குவதன்று உழைப்பும் உறுதியும்
வெங்கொடுமை வெல்வர் ஜப்பானியரே

Thursday, 17 March 2011

  ....  குருதிக்காசு  ( BLOOD MONEY )  ....

ஆறு கோடி கொடுத்தால் போதும்
ஆட்கள் இருவரைக் கொல்லலாம்
மற்ற விலைகள் விண்ணில் பறக்குதாம்
மனித விலையோ மண்ணில் மலியுதாம்
கொலையுண்டால் போதும் இன்று
குருதிக்காசு உறவினருக்குண்டு
குருட்டுத் தீர்ப்பும் உளவாளிக்குண்டு
 பட்டப்பகல் படுகொலைக்கு
பாகிஸ்தானில் தீர்ப்பிதுவாம்

Saturday, 29 December 2007

Quality and Uniformity in Higher Education

         Technology - especially ICT - can revolutionise mass    learning in a country like India . At present , Distance Education has come handy for the less privileged as it is affordable and convenient . Yet, we have to go a long way in harnessing the enabling technology to make higher education reach the unreached. What is required is not just government initiative and investment , but instituting a proper regulatory mechanism and facilitating framework . To ensure uniform standards and acceptable quality, common infrastructure and resource pooling may be adopted at the national level.This shall help the Distance Education providers and the distance learners.
          Sensing the contemporary expectations, Universities are trying to reachout the mass of learners through online programmes adopting the e-learning concept.
             Pl.visit my website         :  http://www.sabavadivelu.com
                      and also visit          :  http://www.edusearchonline.in