அலைந்து திரிந்து அறிந்தேன் அவனை !
ஆலயம்
பல சென்று
பதிகங்கள் பாடி வந்தேன்
மசூதித்
தளமதில் தலைதவழத் தொழுது வந்தேன்
மாதாகோயில்
சென்று மணியடித்துச்
செபித்து வந்தேன்
பொற்கோவில்
புகுந்து புனிதநூல் படித்து வந்தேன்
புத்தவிகாரம்
நுழைந்து புனிதனைத் தொழுது வந்தேன்
மகாவீரர் முன்னின்று
மனமுருக வேண்டி வந்தேன்
பூசைஅறையில்
பூக்கொண்டு நாளும் பூசித்து வந்தேன்
அனைத்தும்
புரிந்தும் அடிமனம் ஆறுதல் கொள்கிலையே
என்செய்வேன்
இனியொரு இடம்தான் செல்வதற்கிலையே
சகத்தின்
நாயகம் சகலருக்கும் என்னும்
சமயம்
கடந்ததொரு ஆன்மிகம் உண்டோ ?
உள்மனக்
குரலொன்று உரைத்தது ஆங்கே - ‘ஆசுநீங்கிய அகமெனின்,
உள்ளே உறைவான் உத்தமன் ’
ஆணவம்
களைந்து, அகத்தை விரித்து, அறம்
தேக்கினேன்
அகமும்
புறமும் அவனிருக்கக் கண்டேனே !