எனது மின்னூல்கள்

Saturday 20 February 2016

எனது அண்மைக் கவிதை



உயிர்கள் உவந்து வாழ்கவே


கருமை கரைந்திட பொன்னொளிக் கதிர்களொடு
காலை புலர்ந்தது உலகம் உயிர்த்திடவே
இருகண் இன்புற இலங்கிடும் இயற்கை
இன்தமிழ்க் கவிதை விரித்திடும் இறக்கை

பாதங்கள் பழகின பச்சைப் புல்லிடை
செவிகள் தோய்ந்தன புள்ளின ஓசையில்
மூக்கும் துய்த்தது மயக்குறு சுகந்தமே
கண்கள் உண்டன கவின்மிகு காட்சிகள்

சின்னஞ்சிறு பறவை கூட்டாய்க் குளித்திட
கன்னங்கரேலெனப் பெருவயிற்று எருமைகள்
கன்றுகள் தொடர்ந்தசைய சேறாடச் சென்றிட
கறப்பாடாம் கறுப்பாடும் மந்தையென மேய்ந்திடுமே

சுரந்து சுரந்து புரக்கும் சுந்தரப் பசுக்கள்தம்
சுற்றமொடு கன்றாட மேய்ச்சல் நிலம் நோக்கிட
பஞ்சாரம் விடுத்துக் கோழிகள் குஞ்சொடு கிளறிட
பார்த்துவக்கப் பலவுண்டாம் சிங்காரச் சிற்றூரிடையே 


நாள் முழுதும் நடந்திடலாம் நந்தவனங்களிடை
நறுமலர்கள் கொய்திடலாம் நாதன் அடிசூட
சுவைமிகு கனிகள் தேனொடு தேர்ந்திடலாம்
சுனைதரு குளிர்நீர் சுகமாய்ப் பருகிடலாம்

குளத்து மீன்கூட்டம் குதுகலித்துக் கூடியாட
குத்துடை கொக்கும் ஒற்றைக்கால் தவமிருக்க
வண்ணத்துப் பூச்சிகளின் பூவிருக்கை மாநாட்டில்  
வாத்துகள் ஒலியெழுப்பி வளையவளைய வந்தனவே !

அடர்ந்த வனங்களில் அழகியல் மோனிக்க
ஆர்க்கும் அருவிகள் ஆனந்தத் தாண்டவமிட
தருக்கள் மலர்மெத்தை தரைமீது தாம்விரிக்க
தளும்பும் தடாகத் தாமரை முகம் விரிக்குமே !

தெருட்டும் மின்னலொடு இடியுந்தான் முழங்கிட
மருளும் மானினம் மாயமாய்த் தாவிட
கருவண்டுக் கூட்டமோ கள்ளுண்டு பண்ணிசைக்க
கருமேகம் வான்கண்டு கானமயில் களிநடமிடுமே ! 


மலையுறை மந்திகள் கிளைவிட்டுக் கிளையாட
கலையுறை கற்றளி காவியங்கள் கதைத்திட
குன்றன்ன களிறுந்தன் பிடியுடன் பிணைந்தாட
குறுகுறுப்புக் குறியீடாய்க் குறுமுயல் குதித்தோடுமே !

உண்ணவும் பருகவும் சுவைக்கவும் தரிக்கவும்
உடுக்கவும் உறங்கவும் உவக்கவும் உறையவும்
இயற்றவும் இசைக்கவும் இயங்கவும் இயல்வது
இயற்கையின் இனிய இயக்கம் அன்றோ ?

மண்ணும் மலையும் மாகடலும்
நீரும் நெருப்பும் நீள்விசும்பும்
வளியும் ஒளியும் ஒருங்கே
      உயிர்கள் உவந்து வாழவேயாம் ! 

Wednesday 10 February 2016




கருத்துள்ள பாடல்கள் சிந்தைக்கு விருந்து. இனிய இசை செவிக்கு விருந்து. இசையுடன் கூடிய பாடல்களோ இனிதினும்  இனியவை.  என்  பாடல்கள் சிலவற்றை  இசைக்கலைஞர்களின் இனிய குரலில் இசைக்கச் செய்து ஒலிக்கோப்பாக இணைத்துள்ளேன். கேட்டு மகிழ இதைச் சொடுக்கவும் :
 


Tuesday 9 February 2016





    புதுப்புனல் கொணர்வாய் பொன்னியே


வாழி நீ வருவாய் எம் காவிரித்தாயே
வழி மீது உயிர் வைத்துக் காத்திருப்போமே
குடகினில் பிறந்தோய் குதித்தோடி வந்தாயே
குன்றா மாமேகம் கொடுக்கப் பெருகுவையே

வளநாடாம் கன்னடம் கடந்து  தவழ்ந்தாயே
வழியெலாம் வண்டல் வளப்பம் நிறைப்பாயே
மேட்டூரில் தேங்கி நின்று மெதுவாய் நீள்வாயே
கொடுமுடி மும்மூர்த்தி முகம்பார்த்து நடந்தாயே

கடம்பவன ஈசனைக் கண்ணாரக் காண்பாயே
செந்துறைப் படியேறி பரமனைப் பாடினாயே
குணசீல கோவிந்தன் குளிர்ந்திடவே குனித்தாயே
கொள்ளிடம் கிளைத்தே அரங்கனை அணைத்தாயே

சிராப்பள்ளிக் குன்றானை அடிதொட்டு அகன்றாயே
கல்லணை புக்கி வாய்க்காலென வடிவாயே
அய்யாறாய் ஆகித்தான் கும்பநகர் செழித்தாயே
ஆரூரை  அடுத்து ஆடுதாண்டும் காவிரியே

மூங்கில் படுகையிலே பண்ணிசைத்தோம்
கரும்புக் காட்டிடையே களித்திருந்தோம்
வாழைத் தோட்டத்தே வளங்கொழித்தோம்
வெம்பசிக்கு செந்நெல் செழித்திருந்தோம்

கனிகள் சுவைத்தோம் மலர்கள் சூடினோம்
தாகம் தீர்த்தோம் தாம்பூலம் தரித்தோம்
கழனி காத்தோம் கலைகள் வார்த்தோம்
காவிரியே நின்னால் நெடுநாள் யாமும்

நலிவுற்றே இன்று நீ நடை தளர்ந்தாய்
நதி இழந்து நாங்களும் நலமழிந்தோம்
அகண்ட காவிரியும் அடி சுடலாயிற்றே
ஆழ்துளைக் கிணறுகள் அடிவயிறுயேற்றே

வாழையொடு வெற்றிலை கரும்புந்தான் காணலியே
நெல்விளைந்த வயலெலாம் வீட்டுமனை ஆயிற்றே
பொங்கிய பொன்னியும் புனல் இழக்கலாகுமோ ?
காமதேனும் தன் சுரப்பு இழக்கக் கூடுமோ ?

வனப்புறு நல்லாள் நீரிழந்து நலிய
வான்மழை பொய்த்து வளமெலாம் குன்ற
மன்னுயிர் பிழைத்து மனமெலாம் திரிய
நின்கடனன்றோ தாயே எம்முயிர் காப்பதும் 

புதுப்புனல் கொணர்வாய் பொன்னியே
புண்ணியத் துறைகள் யாமாடவே
கரைபுரண்டு ஓடுவாய் அன்னையே
காலமும் களஞ்சியந்தான் காத்திடவே