எனது மின்னூல்கள்

Saturday 20 February 2016

எனது அண்மைக் கவிதை



உயிர்கள் உவந்து வாழ்கவே


கருமை கரைந்திட பொன்னொளிக் கதிர்களொடு
காலை புலர்ந்தது உலகம் உயிர்த்திடவே
இருகண் இன்புற இலங்கிடும் இயற்கை
இன்தமிழ்க் கவிதை விரித்திடும் இறக்கை

பாதங்கள் பழகின பச்சைப் புல்லிடை
செவிகள் தோய்ந்தன புள்ளின ஓசையில்
மூக்கும் துய்த்தது மயக்குறு சுகந்தமே
கண்கள் உண்டன கவின்மிகு காட்சிகள்

சின்னஞ்சிறு பறவை கூட்டாய்க் குளித்திட
கன்னங்கரேலெனப் பெருவயிற்று எருமைகள்
கன்றுகள் தொடர்ந்தசைய சேறாடச் சென்றிட
கறப்பாடாம் கறுப்பாடும் மந்தையென மேய்ந்திடுமே

சுரந்து சுரந்து புரக்கும் சுந்தரப் பசுக்கள்தம்
சுற்றமொடு கன்றாட மேய்ச்சல் நிலம் நோக்கிட
பஞ்சாரம் விடுத்துக் கோழிகள் குஞ்சொடு கிளறிட
பார்த்துவக்கப் பலவுண்டாம் சிங்காரச் சிற்றூரிடையே 


நாள் முழுதும் நடந்திடலாம் நந்தவனங்களிடை
நறுமலர்கள் கொய்திடலாம் நாதன் அடிசூட
சுவைமிகு கனிகள் தேனொடு தேர்ந்திடலாம்
சுனைதரு குளிர்நீர் சுகமாய்ப் பருகிடலாம்

குளத்து மீன்கூட்டம் குதுகலித்துக் கூடியாட
குத்துடை கொக்கும் ஒற்றைக்கால் தவமிருக்க
வண்ணத்துப் பூச்சிகளின் பூவிருக்கை மாநாட்டில்  
வாத்துகள் ஒலியெழுப்பி வளையவளைய வந்தனவே !

அடர்ந்த வனங்களில் அழகியல் மோனிக்க
ஆர்க்கும் அருவிகள் ஆனந்தத் தாண்டவமிட
தருக்கள் மலர்மெத்தை தரைமீது தாம்விரிக்க
தளும்பும் தடாகத் தாமரை முகம் விரிக்குமே !

தெருட்டும் மின்னலொடு இடியுந்தான் முழங்கிட
மருளும் மானினம் மாயமாய்த் தாவிட
கருவண்டுக் கூட்டமோ கள்ளுண்டு பண்ணிசைக்க
கருமேகம் வான்கண்டு கானமயில் களிநடமிடுமே ! 


மலையுறை மந்திகள் கிளைவிட்டுக் கிளையாட
கலையுறை கற்றளி காவியங்கள் கதைத்திட
குன்றன்ன களிறுந்தன் பிடியுடன் பிணைந்தாட
குறுகுறுப்புக் குறியீடாய்க் குறுமுயல் குதித்தோடுமே !

உண்ணவும் பருகவும் சுவைக்கவும் தரிக்கவும்
உடுக்கவும் உறங்கவும் உவக்கவும் உறையவும்
இயற்றவும் இசைக்கவும் இயங்கவும் இயல்வது
இயற்கையின் இனிய இயக்கம் அன்றோ ?

மண்ணும் மலையும் மாகடலும்
நீரும் நெருப்பும் நீள்விசும்பும்
வளியும் ஒளியும் ஒருங்கே
      உயிர்கள் உவந்து வாழவேயாம் ! 

No comments:

Post a Comment