எனது மின்னூல்கள்

Monday 25 April 2011

 .... பூத்ததுவே புதியதொரு தலைமுறை   ....   


வித்ய விவேகர் விரும்பிய வரமாய்
விளைந்தனள் எம்குலம் புகழொடு பெருக
வந்தனள் வடிவுறு நல்லாள் அவளே
வர்ஷா எனப் பெயர் கொளவே



இகமது  இரப்பது  இனியதம்  மழையே
இல்லறம்  சிறப்பது  நன்மக்கள்  வரவே
வர்ஷா  நீயும் வர்ஷிப்பாய்  ஈங்கு
வளம்பல  வரவும் திறம்பல பெறவும்



பாரினில் சிறந்திருந்த பாரதத்தின் பாதமாய்
பண்டுதொட்டு புகழுடைத்து தமிழ்கூறும் மாநிலமே
மாதவமே செய்திடனும் மங்கையராயிங்குப் பிறந்திடவே
மன்னுபுகழ் பெற்றாய் இக்குலத்தில் நீயும் உதித்தே



அன்பும் அறமும் அகத்தே பெற்றனர்
கல்வியும் கலையும் கண்களாய் உடையனர்
தானமும் தர்மமும் தானுடையர் ஆயினர்
காதலும் கடமையும் கலந்தே பயின்றனர்



வீரமும் விவேகமும் விளைத்து மகிழ்ந்தனர்
பாட்டும் பண்ணும் பழகிக் களித்தனர்
இசையும் கூத்தும் இழைத்து வந்தனர்
வேள்வியும் வித்தையும் வேண்டிப் பெற்றனர்



மோனமும் ஞானமும் முதலில் முயன்றனர்
பக்தியும் முக்தியும் பாருக்கே பகன்றனர்
வேதமும் வேதாந்தமும் வெளியுலகுக் களித்தனர்
சித்தும் சித்தாந்தமும் சிறக்கக் காட்டினர்
மந்திரமும் தந்திரமும் மானுடர்க்குப் புகட்டினர்



தவமும் தத்துவமும் தரணிக்களித்தனர்
பசுவுக்கும் பறவைக்கும் நேர்செய்யலாயினர்
பயிருக்கும் கொடிக்கும் பரிவுடையராயினர்
பகுத்தறிவும் பழமையும் பாருக்கு உரைத்தனர்
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மெய்ப்படுத்தினர்



காண விழைந்தனள் இவையாவும் காவிரித்தாய்
கண்டதும் கவிதையாய்ப் பொங்கிப் பெருகினள்
வண்டலும் வளமையும் வாரியே வழங்கினள்
தண்டமிழ் நாட்டில் செழுமையே நிறைத்தனள்



பாட்டன் பகன்றவையாவும் பழம் பெருமையம்மா
பாரிலின்று பரிதவித்து நிற்பதுநம் சிறுமையம்மா
கனவாய்ப் போனதுவே காவிரியின் பெருவெள்ளம்
கரிகாலன் கரையதுவும் காலடிப் பாதையானதுவே
அகண்ட காவிரியும் ஆடுதாண்டிக் காவிரியானதே



புதுவரவே             புத்துயிரைப்          புகட்டிடுவாய்
புதுப்பொலிவே   புகழனைத்தும்     ஈட்டிடுவாய்
புதியதலைமுறையே புதுமையெனப் புறப்படுவாய்
பழம்பெருமை     பக்குவமாய்           மீட்டிடுவாய்
பூவுலகில்             நம் புகழை             நாட்டிடுவாய்



பொய்யாது    நீயும்          பொழிவாய்    அன்பை
செய்யாது     நீயும்          மறவாய்       தின்மை
சொல்லாது   நீயும்          செய்வாய்     நன்மை
கல்லாது      நீயும்          தவிர்ப்பாய்   பொய்மை
நில்லாது      நீயும்          விலகுவாய்   கயமை
வையாது      நீயும்          வாழ்த்தாய்    உயிரை
மறவாது       நீயும்          ஈவாய்         கருணை
தவறாது       நீயும்          கொள்வாய்   மேன்மை
வாழ்வாங்கு   நீயும்          வாழ்வாய்      இம்மை
சூழாது        நின்னை      சூதும்        வாதும்



வற்றாது வர்ஷிப்பாய் வருணனது தங்கையாய்
வழுவாது வடிவேலன் வாக்கெதுவும் சத்தியமாய்




                                                                                       பேத்தியை வாழ்த்திப் பாடியது

No comments:

Post a Comment