பயில்வோர்ப் பட்டுண்டு உலகம்
கல்வியை விற்றுக் கறைக்காசு குவித்த குபேரர்கள்
கூட்டமாய் அடைபடட்டும்
கற்கையில் களம்புகுந்து அறப் போராடியோர்
காலத்தே வெளிவரட்டும்
வித்தகம் உடையோர் விலைபோவாராயின்
கொட்டடியில் அடைபடட்டும்
சுத்தமனத்தோர் சுயத்தொடு வினைபுரிந்தோர்
வீதிதோறும் வெளிவரட்டும்
எத்தித் தின்போர் எதற்கும் துணிவோர் எளிதில்
வாராது அடைபடட்டும்
நித்தியச் சோற்றிற்கு நிரந்தரம் இல்லாதோரெலாம்
நீதியுற வெளிவரட்டும்
கோடிகள் குவித்து கொட்டமடிப்போர் குறிவைத்தே
கூண்டொடு அடைபடட்டும்
வாடிவதையுறுவோர் வளமொடு வாழ வழிகாட்டுவோர்
விரைந்து வெளிவரட்டும்
தவமென தாமே தனிவழி கண்டு மரபுரிமை முயல்வோர்
முற்றாய் வெளிவரட்டும்
பனியில் உறைந்து வெயிலில் உலர்ந்த அறப்போராளர்
நலமே வெளிவரட்டும்
கள்ள நோக்குடன் கமுக்கச் சதிராடுவோர் கடையரென சடுதியில் அடைபடட்டும்
உள்ள சுத்தியொடு ஊருரிமைக்கு உழைக்கும் உத்தமர்
உடனே வெளிவரட்டும்
படித்தவர் பொதுவெளி புகுதலும் பண்பாடே யென்போர்
பரந்து வெளிவரட்டும்
அடுத்தவர் வெற்றி அபகரிக்கத் துடிக்கும் அரசியல் நரிகள்
அன்றே அடைபடட்டும்
அறமொடு மறம் கரந்து அந்நியர் போற்றும் அறிவிலிகள்
அட்டியின்றி அடைபடட்டும்
தடியெடுத்தோர் எல்லாம் தண்டல்நாயகராய் எண்ணின்
தவறாதே அடைபடட்டும்
தடியடியே தனக்குவப்பாய்ப் பயிரைமேய்ந்த வேலிகளும்
படிப்பினையாய் அடைபடட்டுமே!
No comments:
Post a Comment