கார்மேகம் வான
வீதியில் ஊர்வலம் கண்டதும்
இடி முழக்கி
மின்னல் வெட்டி மிரட்டியதுவும்
அம்மாவைக் கட்டியே
அர்ச்சுனா என்றதுவும்
மழையெனும் மாயம்
மறுபடியும் நிகழ்ந்ததுவும்
குளம் குட்டையெல்லாம்
நிறைந்து தளும்பியதுவும்
குஞ்சு மீன்கள்
ஆங்கே உயிர்த்து விளையாடியதுவும்
கூட்டங் கூட்டமாய்க்
கொக்குகள் குவிந்ததுவும்
குள்ளப் பசுவதுவும்
கொட்டிலில் ஈன்றதுவும்
கொல்லையில்
ரோசா பூத்துச் சிரித்ததுவும்
குலை தள்ளிய
வாழையை வியந்து மகிழ்ந்ததுவும்
கோயில் கொடியேறி
கொண்டாட்டம் துவங்கியதுவும்
ஒன்று விடாது
உரைக்கும் மடலதுவாம்
நன்று நம்மிடைப்
பழகிய மரபதுவாம்
இன்று கடிதக்
கலையதுவும் கரைந்து மறைந்ததுவே
குறுஞ் செய்தி
மின்னஞ்சல் குறுக்கினவோ
குழுக்கள் கூட்டும்
இணையந்தான் விரட்டியதோ
விரைந்து செல்லும்
இளையோர்காள் கேளீர் !
கலை நயமாம்
மடல் பல வரைதல்
கடுகுச் செய்தியும்
களிப்பை யூட்டும்
கற்பனை ஊறியே
உள்ளம் உவக்கும்
கைவிடாதீர்
கவின் தமிழில் கடிதம் வரைதல் !
( உலக கடிதம் எழுதும் தினம்
– செப்டெம்பர் 1)
No comments:
Post a Comment