கல்வி  தருவாள்  கலைமகள்
கண்ணினும் மேலாம் கல்வி – அகக் 
கறைகள் களைவதாம் கல்வி
கலைகள் பெருக்கிடும் கல்வி – மனக்
கவலைகள் போக்கிடும் கல்வி              …..  (கண்ணினும்)                
அறிவைப் பெருக்கிடும் கல்வி – ஆர்க்கும்
ஆக்கம் தந்திடும் கல்வி
இன்பம் ஈந்திடும் கல்வி – என்றும்
ஈயக் குறையாக்  கல்வி                   …..     (கண்ணினும்)    
                          
உலகை உய்த்திடும் கல்வி – நமக்கு
உண்மைகள் உரைத்திடும் கல்வி
நாளும் வளர்வதாம் கல்வி – எவரும்
நாடிப் பெறுவதும் நற்கல்வி                …..    (கண்ணினும்)   
                    
பல்துறை கொண்டிடும் கல்வி – திறன்
பல்கிப் பெருக்கிடும் கல்வி
தகைமை தருவது  கல்வி – எளியோர்
தாழ்வு தகர்ப்பதும் கல்வி                   …..     (கண்ணினும்)    
                   
சமயம் வெல்வது கல்வி – வீண்
சாதிகள் கடப்பதும் கல்வி
சமத்துவம் புரிவதும் கல்வி – எதிலும்
சாதனை விளைப்பதும் கல்வி            …..      (கண்ணினும்)        
ஏழமை விரட்டிடும் கல்வி – இல்லார்
ஏற்றம் தீட்டிடும் கல்வி
ஞாலம் சுருக்கிடும் கல்வி – உயர்
ஞானம் தருவதும் கல்வி                   …..      (கண்ணினும்)  
சிந்தனை சீர்த்திடும் கல்வி – நம்
         சிறுமைகள் தீர்த்திட வேண்டுமே
         புலமைகள் நிறைத்திடும் கல்வி – பலபல
புதுமைகள் துலக்கிட வேண்டுமே           ….. (கண்ணினும்)      
பேதைமை போக்கிடும் கல்வி – நல்ல
         மேதைமை வார்த்திட வேண்டுமே
         கீழமை விரட்டிடும் கல்வி  – இனிய
         தோழமை வளர்த்திட வேண்டுமே     …..    (கண்ணினும்)    
         அன்பைப் போதிக்கும் கல்வி – மாந்தருள்
         பண்பை வளர்த்திட வேண்டுமே
         நாநயம் கற்பிக்கும் கல்வி – நம்மிடை
         நாணயம் நாட்டிட வேண்டுமே        …..     (கண்ணினும்)   
இயற்கை  ஆய்ந்திடும் 
கல்வி – என்றும் 
இறைமை உணர்த்திட வேண்டுமே
கல்வியின் நாயகி கலைமகளே – எமக்கு
காலமும் நல்குவாய் நற்கல்வி             …..  (கண்ணினும்)  
 
