கந்தக் காவடி
(மெட்டு:
காவடிச் சிந்து)
கந்தன் என்னும் பேரைக்
காதினிலே கேட்டாலுமே
காதல் பெருகுதடி – கிளியே
களிமிகு கொள்ளுதடி – கிளியே
களிமிகு கொள்ளுதடி
வேலன் என்னும் பேரை
வேறெவரோ கூறினாலும்
வேட்கை கொள்வேனடி – கிளியே
வேறெதுவும் வேண்டேனடி – கிளியே
வேறெதுவும் வேண்டேனடி
முத்துக் குமரன் பேரை
முணுமுணுக்கக் கேட்டாலுமே
முற்றும் இனிக்குதடி – கிளியே
முன்னைவினை தீருதடி – கிளியே
முன்னைவினை தீருதடி
கந்தனென்றும் கடம்பனென்றும்
கார்த்திகேய கதிர்வேலென்றும்
காசினியில் அழைப்பாரடி – கிளியே
கருத்தினிலே நின்றானடி – கிளியே
கருத்தினிலே நின்றானடி
தண்டமிழின் தலைவனாவான்
தந்தைக்கே குருவுமானான்
தணிகைவேலன் தருவானடி – கிளியே
தவமதுவே தழைக்குதடி – கிளியே
தவமதுவே தழைக்குதடி
ஆறுபடை வீடுகொண்டான்
ஆற்றுப்படைத் தலைவனான்
ஆடுமயில் அமர்ந்தோனடி – கிளியே
ஆறுமுகம் அருள்வானடி – கிளியே
ஆறுமுகம் அருள்வானடி
சேவற்கொடியோன் செந்தில்
சேரும் அடியாரெல்லாம்
சேமம் அடைவாரடி – கிளியே
சேவடி சேர்வாரடி – கிளியே
சேவடி சேர்வாரடி திருச்சிராப்பள்ளி .... சபா வடிவேலு
No comments:
Post a Comment