எனது மின்னூல்கள்

Thursday, 15 October 2015

குறவஞ்சிப் பாடல் - சிராப்பள்ளி குறவஞ்சி

    சிராப்பள்ளி குறவஞ்சி
வயல்சூழ்ந்து வளம் கொழிக்கும் வண்ண மலை அம்மே யம்மே !   
வயலூரை அண்டையிலே கொண்ட மலை எங்கள் மலை !
வாழையெல்லாம் வாழ்த்தி நிற்கப் பேணும் மலை அம்மே யம்மே !
வான்முகிலும் குடைப் பிடித்து வணங்கும் மலை எங்கள் மலை !
வேணுவும்தான் படுகையிலே பாடும் மலை அம்மே யம்மே !
வெற்றிலையும் செங்கரும்பும் விளைக்கு மலை எங்கள் மலை !
நீர்தேக்கும் தெப்பக்குளம் திகழும் மலை அம்மே யம்மே !
நீலகண்டன் நெடிதுயர்ந்து நிலைக்கும் மலை எங்கள் மலை !

அரங்கனும்தான் அக்கரையில் பார்க்கும் மலை அம்மே யம்மே !
ஆவலுடன் காவிரித்தாய் அணைக்கும் மலை எங்கள் மலை !
திக்கெட்டுமே காட்சிதரும் தெய்வ மலை அம்மே யம்மே !
திரு ஆனைக்கா அருகிருக்கும் அழகு மலை எங்கள் மலை !
எறும்பூரும் இணையெனவே இலங்கும் மலை அம்மே யம்மே !
ஏறனவன் துணையிருக்கும் கோட்டை மலை எங்கள் மலை !
வெக்காளி எல்லை நின்று காக்கும் மலை அம்மே யம்மே !
விறலிமலை வேலவனின் அப்பன் மலை எங்கள் மலை !

***********அய்யர்மலை ஈங்கோய்மலை அணிமை மலை யம்மே !
உய்யக்கொண்டான் உள்ளூரில் உறையும் மலை யம்மே !
பட்டூரின் பரமனுக்குப் பக்க மலை  யம்மே !
பாடல்பெற்ற தலங்க ளெல்லாம் சூழு மலை  யம்மே ! **********

இடர்நீக்கு நெடுங்களத்தான் அணுக்க மலை அம்மே யம்மே !
ஈடில்லா கற்றளிதான் ஈர்க்கும் மலை எங்கள் மலை !
கரிகாலன் கல்லணையைக் காக்கும் மலை அம்மே      யம்மே !
களஞ்சியந்தான் காத்திடுமே காவல் மலை எங்கள் மலை !
உச்சியிலே ஆனைமுகன் அமர்ந்த மலை அம்மே யம்மே !
உறையூரில் உயர்ந்து நிற்கும் பண்டு1 மலை எங்கள் மலை !
தாயாகித் தயைபுரிந்த தாணு மலை அம்மே யம்மே !
தமிழ் ஞான சம்பந்தன் பாடும் மலை எங்கள் மலை !

நலமெல்லாம் நமக்களிக்கும் நந்தி மலை அம்மே யம்மே !
நாவுக்கரசர் நற்றமிழ்தான் நண்ணும் மலை எங்கள் மலை !
தாயுமானான் தமிழ் பாடத் தந்த மலை அம்மே யம்மே !
தமிழ் மொழியின் உபநிடதம்2 தந்த மலை எங்கள் மலை !
மட்டுவார் குழலிநாதன் மேவும் மலை அம்மே யம்மே !
மட்டில்லா மகிமையுறு தென்கயிலை எங்கள் மலை !
பாவமெல்லாம் போக்கிடுமே சுயம்பர்3 மலை அம்மே யம்மே !
பங்குனியில்4 பகலவனும்  நுழையும் மலை எங்கள் மலை !

************மக்களெல்லாம் மனமுருகிப் பாடும் மலை யம்மே !
சிக்கலெல்லாம் தீர்த்துவைக்கும் சிராப்பள்ளி யம்மே !
நல்லதெல்லாம் நல்கிடுமே நாதன் மலை யம்மே !
அல்லதெல்லாம் அகற்றிடுமே ஆன்ற மலை யம்மே ! *************
ஆலோன்தனைப் பாடிடுமே ஆதி மலை அம்மே யம்மே !
அடியார்கள் அண்டிவரும் அரனார் மலை எங்கள் மலை !                   எங்கள் மலை , எங்கள் மலை, எங்கள் மலை !
------------------------------------------------------------------------
குறிப்புகள் :
1.   திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் குன்று 340 கோடி ஆண்டுகளுக்கும் மேலான பழைமையானது.
2.   தாயுமானன் என்னும் சிவஞானி இயற்றிய பாடல்களின் தொகுப்பு (‘தாயுமானவர் பாடல்கள்’) தமிழ் மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்பெறுகிறது.
3.   தாயுமானவர் கோவிலின் சிவலிங்கமானது சுயம்பு லிங்கம் ஆகும்.
4.      ஆண்டுதோறும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆம் நாட்களில் மேற்கில் மறையுமுன்  சூரியக் கதிர்கள் கோயிலினுள் நுழைந்து லிங்கத் திருமேனி மீது படருதல் வனப்புறு காட்சியாம்! (சிவ லிங்கம் மேற்கு நோக்கியுள்ளது)
                           ------------------------------------------------------------------
                             
96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று குறவஞ்சி என்பதாம். இதில் தலைவிக்கு குறத்தி குறி சொல்வதற்கு முன்பாய் தன் மலைவளம் கூறுதல் என்பது இவ்விலக்கியத்தின் ஒரு உறுப்பு. அம்மரபிற்கேற்ற வண்ணம் இச்செய்யுளை அதே பண்ணில் பாடுமுகத்தான் அமைத்துள்ளேன். நன்றுடையானை, தீயதில்லானை வாய் ஆரப் பாடிக் களிப்பீர் !  உள்ளம் குளிர்வீர்  !                                                                                                                                                                                                                 -------------------------------------------------------------------- 
                                                                                                                                                                                          எனது இப்பாடலை திருமதி சாருமதியின் இன்னிசைக் குரலில் கேட்க இதைத் தேர்வு செய்யவும்             

                        --------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

Sunday, 20 September 2015

மறதி எனும் மா பிணி

மறதி எனும் மா பிணி                                                                                                         
உன்னதமாம் மாந்தர் மூளை                            உலகினில் ஒப்பிலை வேறே
பிறப்புதொட்டு இறப்பு வரை
பிறழாது நிலைக்குமோ நினைவுகள் ?

கண்டதும் கற்றதும் கேட்டதும் எண்ணியவும்
கணக்காய் நினைவில் நிற்பதும் உண்டாமோ?
மறக்க விழைவது மண்டிக் கிடக்குமே
இருக்க விழைவது இல்லாது ஒழியுமே

பக்கம் பக்கமாய்ப் படித்தது என்னே?
பலகாலும் நினைவில் படிந்தது என்னே?
சொடுக்கில் சொற்கள் அடுக்கியது என்னே?
சொல்லாது இப்போது மறைவது என்னே?

மறதி மனிதர்க்கு நன்றா என்ன?
மக்கும் நினைவுகள் பலவா என்ன?
மதியும்மறதிநோய்உறுமா என்ன?
முதியோர் அவதி ஒன்றா என்ன?

பழகிய பெயரும் பதுங்கி நிற்க
பழக்க வழக்கம் தடுமாறித் திகைக்க
செய்வது செம்மையாய் செய்யாது தவிக்க
முதியோர் மறதி பிணியெனக் கண்டோம்

இடையறா மனப் பயிற்சியாம் என்றும்
இறுக்கமுறா மனநலமாம் இரவுதொறும்
இயல்பாய் உறக்கமாம் இதமாய் ஊணாம்
இனியன இவையெலாம் நாடொறும் கொள்ள

கள்ளும் புகையும் இன்னாதெனக் களைந்து
உள்ளும் புறமும் வெகுளி துறந்து
உற்றார் உறுதுணை தமக்கென உவந்து
முதியோர் முயலமறதிநோய்போமே !

முற்றும் இயல்பே முதியோர் ஞாபகமறதி
சற்றும் தகாதே இளையோர்க்கு இந்நோய்
கவனச் சிதறல் கருத்துக் குலைவாமே
மனப் பயிற்சி மறதியைப் போக்கிடுமே !

கல்விப் பயிற்சி கடைவரை கைகொடுக்கும்
கவனப் பயிற்சி நினைவுகளை ஏந்தும்
நினைவுக் கலை பயில்வீர் நித்தமும்
நனவுலகை வெல்வீர் நவபாரதத்தீரே !                                      ---- சபா . வடிவேலு                                                                  (உலக ஞாபகமறதி நோய் தினம்செப். 21
(World Alzheimer’s Day)

Saturday, 5 September 2015

MY BOOK

                  

                 வீழ்க சாதி சமயம்!  வெல்க மனித நேயம்!  
                                                 (எனது    கவிதைநூல் )   
       
       எண்ணங்களின் இசைப்பே கவிதைகளாம். சிந்தனைக் கருவை வளர்த்தெடுத்து,  எழிலுருவம் பெற்றிடத் துணைநிற்பவையே கவி தொடுக்கும் சொற்களாம்.  சக்தி தரும் உணவிற்குச் சுவையூட்டுதல் போன்றதே கவிதை வடிவம் . இலக்கணம் கடந்து, இன்னோசை  தேர்ந்து, எளிமையுடன் வடிக்கப் பெறுவதே மரபுசாராக் கவிதையெனலாம்வரிகளை ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிதைகேட்பவர் விழைந்து கேட்கும்வண்ணம்   பழகு தமிழில் பாங்குறச் சொல்லும் திறனே புதுக்கவிதை. யாப்புச் சுதந்திரம் கவிதையை எண்ணற்றவர்களிடம் எடுத்துச்செல்ல உதவுகிறது. பண்டிதர்களுக்கும் அப்பால் கவிதாரசனை  இருப்பது கணக்கில் கொள்ளப்படுகிறது.
  கருத்துவானில் கடிவாளமின்றி கற்பனைத்தேரில் சொல்லேருழவர்கள் பவனி வருவர். எத்துணை எத்துணைக் கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் கைபேசித் தளங்களிலும் இணையங்களிலும் மின்னூல்களிலும் மின்னூலகங்களிலும் எனப் பல்லூடகங்களிலும் உலகளாவிய தமிழ் வாசிப்புகள் பரந்து பட்டுள்ளன ! புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சொல்லோவியங்களாய், கலைச் சிற்பங்களாய் நாளும் உயிர்க்கின்றன! வளர் தமிழின் புதுப்புதுப் பரிமாணங்கள் வைகலும் வளர்த்தெடுக்கப் படுகின்றனவே !
           இச்சூழல் தந்த துணிவின் விளைவே நானும் கவிதை எழுதத் தொடங்கியது. பலபொழுதில் பல்வகைச் சூழலில் கருக்கொண்ட கருத்துகளைக் கவிதையாக்கிப் பார்த்தேன்நம்மைச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், மென்மையான மனித உணர்வுகளின் ஆளுமை, உறவுகளின் மென்மையும் வன்மையும், வாழ்வின் வசந்தமான இளமையும், கோடையாகிய முதுமையில் தனிமையும், பழைமையும், புதுமையும்,  ஒளிரும் பன்முக மனித ஆற்றல் எனப் பல்சுவை கொண்ட பாடல்களைத்தான் வார்த்துள்ளேன்.        
 புறநிகழ்வுகளைக் காண்பதையும் கேட்பதையும் உள்ளுவதையும் உணர்வுகளாய் வடித்துள்ளேன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வீச்சும் தாக்கமும் எளிய தமிழில் கதம்பக் கவிதைகளாய்ப் பதிவுபெற்றுள்ளன. 
  கவிதைகளை வாசியுங்கள்; என்போன்ற எளியோர்க்கும் வசமாகும் வண்டமிழை வாழ்த்துங்கள்                          

                        
                    இன்று வெளிவந்துள்ள எனது கவிதைநூல். மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இச்சிறுநூல்  47 எளிய கவிதைகளை உள்ளடக்கியது. விலை ரூ.60

 முகவரி: 
மணிமேகலைப் பிரசுரம் 
7 தணிகாசலம் சாலை, 
தி.நகர், சென்னை 17 
தொலைபேசி: 044-24342926.  
                நண்பர்கள் இந்நூலினை வாங்கி , கவிதைகளைச் சுவைத்து, கருத்தினை வெளியிடுமாறு நட்புடன் வேண்டுகிறேன்.

Sunday, 30 August 2015

எனது கவிதைநூல்

                                                                                                                                   இன்று வெளிவந்துள்ள எனது கவிதைநூல்                                                                                                                                                                          கவிதைகள் :47                                                                                           பக்கங்கள் :100                                                                                                     விலை ; 60                                                                                                             மணிமேகலைப் பிரசுரம்                                                                                சென்னை - 17