எனது மின்னூல்கள்

Sunday, 2 June 2013

குறள் கிளறும் சிந்தனைகள்

திருக்குறள் தமிழில் முப்பால் நெறிகூறும் மூலநூல். முன்னாள் பதின்மர் தவிர்த்து, திருக்குறள் அச்சேறிய  (1812) இந்த நூறாண்டு காலத்தில் பல அறிஞர்களும், நூலோரும் விரிவான உரைவிளக்கங்கள் தந்திருப்பதோடுஉலகின் பலமொழிகளில் மொழிவல்லுநர்களால் பெயர்க்கப்பட்டுள்ள பெருமையுடைத்துஅண்மையில் நரிக்குறவர் மொழியில் (வக்ரபோலி) பெயர்க்கப்பட்டதையும் கணக்கில் கொள்வோமாயின், இதுவரை 27 மொழிகளில்  திருக்குறள் பயில வகைசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் திருக்குறளை மொழிபெயர்த்து உரை எழுதியுள்ளனர். எண்ணற்ற கட்டுரைகளும், ஆய்வுரைகளும், பொழிவுகளும் திருக்குறள் இன்றளவும் கண்டுவருகிறது என்பது தமிழுக்கே பெருமை சேர்ப்பதாகும்.  
இவ்வாறிருக்க, கடவுள் நம்பிக்கை போன்ற சில குறள்நெறிகள் மறுக்கப்படுவதோடு, திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" எனும் அதிகாரமே இடைச்செருகல் என்று வாதிடுவாரும் உளர். சமயம், மற்றும் கடவுள் சார்ந்த ஆன்மிகக் கருத்துகள் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களிடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் நிலவிவருவதாம். அவற்றை மறுப்பாரும், எதிர்ப்பாரும் அற்றை நாளிலிருந்தே உண்டு என்பதும் வரலாறு. ஆயினும், வள்ளுவர் வாய்மொழிக்குத்  தவறாகப் பொருளுரைக்கும் / பொருள்கொள்ளும்  தீமைக்கு ஆளாகலாகாது என்பதும் இற்றை நாளில் நாம் உணரவேண்டிய ஒன்றாம்.
 இக்கால உரையாசிரியர்களில் சிலர் முற்றிலும் புதுமையான முறையில் விளக்கங்கள் தருவதோடு, ஆய்வாளர்கள்கூட திருக்குறளைப் புதுமைப் பார்வைகொண்டு கருத்துருக்களைத் தர முற்பட்டுள்ளனர். மிகச்சில குறள்நெறிகள் இக்கால விழுமியங்களுக்கு முரண்பாடாய்த் தோன்றுவதாக வாதிடுவோரும் உண்டு. அவர்களது கூற்றையும் கூர்ந்து கேட்டு விளக்கமளிப்பது இன்றையத் தேவையெனலாம்.
திருக்குறள் வாழ்வியல் நெறிகளை எளிமையும், இனிமையும் நிறைந்த மொழியில், படிப்போர் உள்ளத்தே பசுமரத்தாணிபோல் பதியும் வண்ணம் மிகக் குறுகிய வடிவிலமைந்த குறள் வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.    நூல்களிலும்,

பொழிவுகளிலும் குறட்கருத்துகள் சரளமாக மேற்கோள் காட்டப்படுவதையும் காணலாம். ஆயினும், இலக்கிய வட்டத்திற்கும் அப்பால்இன்று பல்லூடகத் தாக்கங்களுக்குப்   பெரிதும் உள்ளாகியிருக்கும் சாதாரண மக்கள் மற்றும் பாமர மக்களிடையும் பெருவாரியாகச் சென்றடைய வேண்டியது இக்காலக் கட்டாயம் எனலாம்.
இவ்வகையில் அமையுமாறு மூன்று கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்போர், கால ஓட்டத்தில் நாளும் மாறிவரும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும்கூட திருக்குறள் எவ்வாறெல்லாம் பொருந்தி வரலாம் அல்லது சிற்சில இடங்களில் மாற்றத்திற்குள்ளாகலாம் என்பதை நடுவுநிலைமையோடு ஆழ்ந்து சிந்தித்துப் பயனுற வேண்டுமென்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த குறிக்கோள். இதைத் தவிர்த்து, திருக்குறளுக்குப் புதிதாய்ப் பெருமை சேர்க்க வேண்டியதொன்றில்லை.

இம்மூன்று கட்டுரைகளையும்  எனது இணைய தளத்தில் பார்க்கவும்(sabavadivelu.com)

  வள்ளுவம் தெளிவோம்  !  வாழ்வில் உயர்வோம்  !!

                                           
                                                                                சபா வடிவேலு

Thursday, 29 September 2011

சொற்றிறம்


பேசவும்,   பேசாதிருக்கவும்  பழகுவோம்      

உயிரினங்களிலேயே  மனிதரை  வேறுபடுத்திச் சிறப்பிப்பது  பேசும் திறனே. விழுமிய செல்வமாகிய சொற்றிறனின் அருமையுணர்ந்து மானிடர் வாய்மொழிதல் வேண்டும். 'ஒரு சொல் வெல்லும் , ஒரு சொல் கொல்லும்' என்பது சொல்லின் வலிமையைச் சுருக்கென உணர்த்துகிறது. சொல்லாடல் என்பது பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் பயத்தல் வேண்டும். தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் சொற்களைத் தவிர்த்தல் நலம் பயக்கும். “சொல்லுவதெல்லாம் மறைச்சொல்லினைப்போலப் பயனுளதாக”  வேண்டுமென்பார் மகாகவி. வாக்கினிலே யினிமையும். களிபடைத்த மொழியும் வேண்டுவாரவர். “காட்சி சொல்லாலே தோன்றிற்று ..... யார்கொல் இச்சொல்லின் செல்வன்” என முதன்முதலில் அனுமனின் சொற்களைக் கேட்ட  இராமன் வியந்து கூறுவதாகக்  கம்பன் பாடுவார். பண்ணமர்ந்த மென்மொழியார் என்பார் ஞானசம்பந்தர். சொற்றமிழால் பாடச்சொல்லிச் சுந்தரரை   இறைவனே நயந்து கேட்பார்
உலகப்பொதுமறை  தந்து வான்புகழ்கொண்ட வள்ளுவரும், சொல்வன்மை எனுமொரு தனியொரு அதிகாரம் தந்துள்ளார். ஆக்கமும் கேடும் சொல்லால் வருமெனவும், திறனறிந்து சொல்லுக சொல்லை யென்றும், பிறிதோர் சொல் வெல்லாவண்ணம் சொல்லுகவெனவும் சொல்லின் திறம் உணர்த்துவார்.
கூறும் மொழி யாவும் இனிமையுடையதாக இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவே  இனியவை கூறல் என்ற தனி அதிகாரம் படைத்துள்ளார். இன்சொல் இருக்கக் கடுஞ்சொல் கூறல் , கனியைத் தவிர்த்துக் காயைச் சுவைத்தலுக்கு ஒப்பாகும் என்றும், தீயினால் சுட்டபுண் ஆறிவிடும்; நாவினால் சுட்ட வடுவோ என்றும் ஆறாது என்றும், நா காக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்றும் சொல்லின் வலியை வலியுறுத்திக் கூறுவார் வள்ளுவர். இத்தோடு நில்லாது, ‘பயனில சொல்லாமை என்று மேலுமோர் அதிகாரம் இயற்றிப் போந்தார். சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க சொல்லில் பயனிலாச்சொல் என்றும், தீமையிலாத  சொலல் வாய்மை ஆகும் என்றும் சொல்லின் பயனை   பொய்யாமொழிப் புலவர்    விரிப்பார்.
தீச்சொல் தவிர்த்து தீஞ்சொல் பழகவேண்டும் நாம். சொல்லுக என்றும் சொல்லற்க என்றும் பாகுபடுத்திப் பாடினார் பழம் பாட்டி ஒளவை. இளம்பிராயத்திலேயே அவர்தாம்    சீராய்ப்  பேசுதல்  வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்க் குழந்தைகளுக்காக  தளிர்தமிழில் ஆத்தி சூடியும்    யாவருக்குமாக எளிய தமிழில்  கொன்றை வேந்தனும் பாடிக்கொடுத்தார் அந்தத் தமிழ் மூதாட்டி.


இருநூறு அறவுரைகள் அடங்கிய இவ்விரு சிறுநூல்களிலும் சொல்லுதல் எங்ஙனம் என்று விரித்துக் கூறியுள்ளார். இருபத்தியிரண்டு அறவுரைகள் மொழிதல் பற்றியவையாம். அவையாவன:

1.   ஒளவியம் பேசேல்                       (ஆ.சூ.)
2.   கண்டொன்று சொல்லேல்
3.   ஞயம்பட உரை
4.   வஞ்சகம் பேசேல்
5.   சித்திரம் பேசேல்
6.   சுளிக்கச் சொல்லேல்
7.   சொற்சோர்வு படேல்
8.   நொய்ய உரையேல்
9.   பழிப்பன பகரேல்
10.  பிழைபடச் சொல்லேல்
11.  மிகைபடச் சொல்லேல்
12.  மொழிவது அறமொழி
13.  வல்லமை பேசேல்
14.  வெட்டெனப் பேசேல்
15.  ஓரம் சொல்லேல்
16.  கீழோராயினும் தாழ உரை             (கொ.வே.)
17.  கூரம்பாயினும் வீரியம் பேசேல்
18.  தோழனோடும் ஏழைமை பேசேல்
19.  நைபவர் எனினும் நொய்ய உரையேல்
20.  மோனம் என்பது ஞான வரம்பு

மேற்கூறினவற்றை சற்று உற்றுநோக்கின், ஓருண்மை தெற்றெனப் புலப்படும். இருபது கூற்றுகளில்  மூவிடத்தில்  மட்டும் எவ்வாறு பேசுதல் வேண்டுமென அறிவுறுத்துகிறார் ஒளவை (ஞயம்பட உரை, மொழிவது அறமொழி, தாழ உரை என்பனவாம்). மற்றனைத்து இடங்களிலும் எவ்வாறு பேசுதல் ஆகாதெனக் கட்டளையிடுகிறார்.



புது யுகம் படைக்கவிரும்பிய புதுமைப்புலவன் பாரதி இளையபாரதத்தினருக்கு புதிய ஆத்தி சூடி  பாடிக்கொடுத்தார்.இதிலுங்கூட பாரதி சொற்றிறம் பற்றி உரக்கப் பாடுவதாதெனின்:

1.        சொல்வது தெளிந்து சொல்
2.        தூற்றுதலொழி
3.        நேர்படப் பேசு
4.        மெல்லத்தெரிந்து சொல்
5.   வெடிப்புறப் பேசு
6.   மோனம் போற்று
     
 ஒளவை கூறும் பாங்கிலிருந்து சற்றே வேறுபடுத்தி, எவ்விதம் பேசுதல் வேண்டுமென பாரதி நேரடியாகவே கூறுவதறியலாம்.  மேலுமொரு சிறப்பு என்னவெனில்,  இருவரின் ஆத்தி சூடியிலும் பேச்சைத்தவிர்த்து வாளாவிருத்தல் பற்றியும் ஈற்றடியில் கூறுவது காண்க. பேசுதலொழித்தலே ஞானத்தின் எல்லை என்று மெளனத்தின் மேன்மையை  ஈற்றில் மெச்சுகிறார் ஒளவை.   பாரதியோ மெளனத்தைப் போற்றிக் கடைப்பிடிக்கச் சொல்லுகிறார். ஆம், சில சூழலில், பேசுதலைக் காட்டிலும் மெளன மொழியே மிக வலிமையுடைய மொழியாய் விளங்கும்.  சில கேள்விகளுக்கு வாளாவிருத்தல் பொருள்புதைந்த விடையாம். பேசிக் கெடுப்பதைக் காட்டிலும் பேசாதிருந்து சாதிப்பது பெரும் கலையே !

 இங்ஙனம், கடுஞ்சொல் தவிர்த்து இன்சொல்லும், வெஞ்சொல் தவிர்த்து  தண்சொல்லும், தீச்சொல்   தவிர்த்து  நற்சொல்லும் , பிழைச்சொல்  தவிர்த்து கவின் சொல்லும், இழி சொல்  தவிர்த்து செஞ் சொல்லும், வன்சொல் தவிர்த்து மென்சொல்லும், வசைச்சொல் தவிர்த்து இசைச்சொல்லும்  சொல்லுதல் நாளும் பழகுவோம்.