தமிழும் தமிழரும் தலைநிமிரட்டும்
( மெட்டு : காவடிச் சிந்து )
வீரமிகு தமிழர் அன்று
வேண்டியன செய்யா ரின்று
வேடிக்கை பார்ப்பாரடி – கிளியே
வீணரென நிற்பாரடி– கிளியே
வீணரென நிற்பாரடி
வன்கொடுமை பலவும் செய்து
வனிதையரின் சீர்மை சிதைத்து
பண்டு பண்பு துறப்பாரடி – கிளியே
பழிசுமக்க நாணாரடி– கிளியே
பழிசுமக்க நாணாரடி
சாதிச் சண்டை எல்லாம்
சமயச் சழக்கு எல்லாம்
சந்தி சிரிக்குதடி – கிளியே
சச்சரவு நீளுதடி - கிளியே
சச்சரவு நீளுதடி
சாதிகள் இருந்தால் என்ன
சமயங்கள் இருந்தால் என்ன
சாமி எங்கும் ஒன்றுதானடி – கிளியே
சமரசம் வேணுமடி – கிளியே
சமரசம் வேணுமடி
எத்தனை வளங்கள் இங்கு
எல்லாமே எல்லோருக்கும்
எளியோரைக் காப்போமடி – கிளியே
ஏற்றிடுவோம் சமத்துவமே – கிளியே
ஏற்றிடுவோம் சமத்துவமே
பள்ளியிலே பயில்வதில்லை
பணிகளிலும் கொள்வதில்லை
மொழியையும் இழப்பாரோடி – கிளியே
முகமிழந்து திரிவாரோடி – கிளியே
முகமிழந்து திரிவாரோடி
தாயின்மொழி தமிழே யன்றோ
தண்டமிழின் சுவையும் ஒன்றோ
தமிழர்தாம் அறிவதில்லையே – கிளியே
தனித்தமிழில் மொழிவோமடி – கிளியே
தனித்தமிழில் மொழிவோமடி
பற்பல துறைகள் இன்று
பல்கிப் பெருகக் கண்டு
பாங்குடன் படைப்போமடி – கிளியே
பன்முகந்தான் தமிழிற்குண்டு – கிளியே
பன்முகந்தான் தமிழிற்குண்டு
சோதனைகள் வந்தா லென்ன
போதனைகள் ஒன்றா என்ன
வேதனைகள் தீர்ப்போமடி – கிளியே
சாதனைகள் புரிவோமடி – கிளியே
சாதனைகள் புரிவோமடி