மறதி எனும் மா பிணி
உன்னதமாம் மாந்தர் மூளை உலகினில் ஒப்பிலை வேறே
பிறப்புதொட்டு இறப்பு வரை
பிறழாது நிலைக்குமோ நினைவுகள் ?
கண்டதும் கற்றதும் கேட்டதும் எண்ணியவும்
கணக்காய் நினைவில் நிற்பதும் உண்டாமோ?
மறக்க விழைவது மண்டிக் கிடக்குமே
இருக்க விழைவது இல்லாது ஒழியுமே
பக்கம் பக்கமாய்ப் படித்தது என்னே?
பலகாலும் நினைவில் படிந்தது என்னே?
சொடுக்கில் சொற்கள் அடுக்கியது என்னே?
சொல்லாது இப்போது மறைவது என்னே?
மறதி மனிதர்க்கு நன்றா என்ன?
மக்கும் நினைவுகள் பலவா என்ன?
மதியும் ‘மறதிநோய்’
உறுமா என்ன?
முதியோர் அவதி ஒன்றா என்ன?
பழகிய பெயரும் பதுங்கி நிற்க
பழக்க வழக்கம் தடுமாறித் திகைக்க
செய்வது செம்மையாய் செய்யாது தவிக்க
முதியோர் மறதி பிணியெனக் கண்டோம்
இடையறா மனப் பயிற்சியாம் என்றும்
இறுக்கமுறா மனநலமாம் இரவுதொறும்
இயல்பாய் உறக்கமாம் இதமாய் ஊணாம்
இனியன இவையெலாம் நாடொறும் கொள்ள
கள்ளும் புகையும் இன்னாதெனக் களைந்து
உள்ளும் புறமும் வெகுளி துறந்து
உற்றார் உறுதுணை தமக்கென உவந்து
முதியோர் முயல ‘மறதிநோய்’
போமே !
முற்றும் இயல்பே முதியோர் ஞாபகமறதி
சற்றும் தகாதே இளையோர்க்கு இந்நோய்
கவனச் சிதறல் கருத்துக் குலைவாமே
மனப் பயிற்சி மறதியைப் போக்கிடுமே !
கல்விப் பயிற்சி கடைவரை கைகொடுக்கும்
கவனப் பயிற்சி நினைவுகளை ஏந்தும்
நினைவுக் கலை பயில்வீர் நித்தமும்
நனவுலகை வெல்வீர் நவபாரதத்தீரே ! ---- சபா . வடிவேலு (உலக ஞாபகமறதி நோய் தினம் – செப்.
21)
(World Alzheimer’s Day)